பதிவு செய்த நாள்
06
ஜன
2019
02:01
திருவண்ணாமலை: பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே, நேற்று, திருவண்ணாமலை வந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு, தீபாராதனை காட்டி, மக்கள் வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம், ஈஜிபுராவில், 11 முகம், 22 கைகள், ஐந்து தலை பாம்பு வடிவம், பீடம் ஆகியவை சேர்த்து, 108 அடி உயர, விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, அங்குள்ள மக்கள் முடிவு செய்தனர். இதில், சிலைக்கு, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில், 350 டன் எடையில், வெட்டி எடுக்கப்பட்டது. இதில், முகம் மட்டும் வடிவமைத்து, மற்ற பாகங்களை, கர்நாடகாவுக்கு கொண்டு சென்று, செதுக்க முடிவு செய்யப்பட்டது. இது, கடந்த, 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டது. பின், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அவலூர்பேட்டை வழியாக, நேற்று முன்தினம், திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடியை வந்தடைந்தது. நேற்று காலை, அங்கிருந்து புறப்பட்டு, மங்கலம் வழியாக, திருவண்ணாமலை பைபாஸ் சாலையை, சிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும், கற்பூர தீபாராதனை காட்டி, மக்கள் வழிபட்டனர். திருவண்ணாமலையில், பஸ் ஸ்டாண்ட், கிரிவலப்பாதையை கடந்து, செங்கம் வழியாக ஊத்தங்கரையை சிலை சென்றடைய உள்ளது. ரயில்வே மேம்பாலம் வழியாக, கொண்டு செல்ல, அனுமதி கிடைக்காததால், சாமல்பட்டி வழியாக, சிலையை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.