போடி: போடி அருகே தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில் தீர்த்த சுனை நீரில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தேங்கிய கழிவுகள் போடி சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை குழுவினர் மூலம் அகற்றப்பட்டன. போடி ஒன்றியம் கோடாங்கிபட்டி ஊராட்சியில் உள்ளது. தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்து சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. பக்தர்கள் நீராடி செல்வர். முருகன், ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலையணிய வருவர். சமீபத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக சுனை நீர் தொட்டி பகுதியில் மண்கழிவுகள் மட்டுமின்றி, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியது. இதனால் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திடமும் சேவாபாரதி சங்கம் மூலம் புகார் செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் போடி சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல் தலைமையில் செயலாளர் குமார், துணைத்தலைவர் முருகன் குழுவினர் தீர்த்ததொட்டியில் தேக்கமான மண், கழிவுநீரை அகற்றினர்.