பதிவு செய்த நாள்
11
ஜன
2019
02:01
கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், கோலாகலமாக நடந்த குண்டம் விழாவில், கடும் குளிரை பொருட்படுத்தாமல், 50 ஆயிரம் பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, டிச.,27ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.இதற்காக அம்மன் சன்னிதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு நெருப்பு மூட்டினர்.
தீ மிதிக்க, வெள்ளாளபாளையம் பிரிவில் துவங்கி, திருகினிபாலம், பெருமாள் கோவில் வரை, கடும் குளிரை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நேற்று காலை, 6:50 மணிக்கு, அம்மன், சிம்ம வாகனத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 7:00 மணிக்கு திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் தலைமை பூசாரி, குண்டத்து நெருப்பை, இரு கைகளால் அள்ளி வீசி, காலை, 7:15 மணிக்கு, முதலில் தீ மிதித்து, விழாவை துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், மக்கள் இறங்கினர். மொத்தம், 50 ஆயிரம்பேர், மதியம், 1:30 மணி வரை, ஆறரை மணி நேரம், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.