பதிவு செய்த நாள்
11
ஜன
2019
03:01
சபரிமலை: தமிழக அரசு விரைவு பஸ்கள் பம்பை வரை செல்ல நிபந்தனைகளுடன் கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.பம்பையில் வெள்ளப்பெருக்கால் வாகன நிறுத்துமிடங்கள் உருக்குலைந்துள்ளன. இதனால் அனைத்து தனியார் வாகனங்களும் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலமே பக்தர்கள் பம்பை செல்ல முடியும்.திருவனந்தபுரம், எர்ணாகுளம், செங்கன்னூர், கோட்டயம் பகுதிகளில் இருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரை சென்று வருகின்றன. ஆனால் குமுளி, மதுரை, திருச்சி, பழனி, கோவையிலிருந்து வரும் தமிழக அரசு பஸ்களை அனுமதிப்பதில்லை. அவை நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகின்றன.
இதையடுத்து பம்பை வரை தங்கள் பஸ்களையும் இயக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.நீதிமன்ற உத்தரவைடுத்து, கேரள அரசு போக்குவரத்துதுறை செயலர், தமிழக அரசு விரைவு பஸ்களை பம்பை வரை செல்ல அனுமதியளித்தார். ஆனால், அதில் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்றக்கூடாது, நிலக்கல்லில்தான் பக்தர்களை ஏற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பம்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தமிழக பஸ்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கான கேரள அரசு பஸ்கள் தினமும் பம்பை வந்து செல்லும் நிலையில், தமிழக அரசின் 20க்கும் குறைவான பஸ்களுக்கு போக்குவரத்து நெரிசல் என்ற நிபந்தனை விதித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.