திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2019 01:01
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. நேற்று மார்கழி 27ஐ முன்னிட்டு ஆண்டாள், பெருமாளை நினைத்து 108 அண்டாக்களில் அக்கார அடிசல் (நெய் ததும்பும் சர்க்கரைப் பொங்கல்) வழங்கி வழிபாடு செய்ததாக ஐதீகம் உள்ளது. அதனை நினைவு படுத்தும் வகையில் ஆண்டாள்சன்னதியில் 108 கிண்ணங்களில் அக்கார அடிசல்பிரசாதம் வைக்கப்பட்டு, ச்த் விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப்பாராயணம் உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டன. பட்டாச்சாரியார்களால் திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் தரப்பட்டது. மாலையில் சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் ஊஞ்சல் சேவை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் படி ஆண்டாள் - சுந்தரராஜப் பெருமாளிடம் 108 அண்டாவில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), 108 அண்டாவில் வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார். இதன் பொருட்டு பின்னாளில் ராமனுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில், 216 வட்டிலில் பொங்கல் மற்றும் வெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.