தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். வாழும் காலம் வரைக்கும் நமக்கு பால் கொடுத்து உதவும் கோமாதா தான் அது. அன்பும், சாந்தமும் நிறைந்த பசுவைக் கண்டால் பெற்ற தாயைப் பார்த்தது போல மனதில் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே அம்மா என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும். குழந்தையாக இருந்தபோது மட்டுமே பெற்ற தாய் பாலுாட்டுகிறாள். பசுவோ காலம் முழுக்க நமக்கு பால் தருகிறது, இதே போல காளைகள் நமக்கு உணவளிக்கும் பணியில் பாடுபடுகின்றன. கலப்பையை இழுத்துக் கொண்டு களிமண் நிறைந்த நிலத்தை உழுகிறது. வண்டிகளை இழுக்கிறது. அவற்றையும் நம் குடும்பத்தின் அங்கமாக நினைத்து, நன்றியுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம்.