ஆசிரியரான ஜோசப்பின் மகன் பீட்டர். காலம் நேரம் பார்க்காமல் தூங்குவான்; ஊர் சுற்றுவான். வகுப்பில் பின்தங்கிய மாணவனாக இருந்தான். ஒருநாள் அவனிடம், “ஒரு கேம் விளையாடுவோமா? என்றார் ஜோசப். “கண்டிப்பாக அப்பா. என்ன கேம் சொல்லுங்க?” என்றான் ஆவலாக. “தினமும் உன் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் வரவு வைப்பேன். அதை நீ செலவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை” என்றார். “சொல்லுங்க அப்பா” “அந்தந்த நாளே செலவு செய்யாத பணம் கணக்கிலிருந்து எடுக்கப்படும். பணத்தை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. அதை செலவளிக்க உனக்கு மட்டுமே உரிமை உண்டு. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்படும். மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது.” என்றார். “நோ பிராப்ளம் அப்பா. எனக்கு பிடித்தது எல்லாம் வாங்கி மகிழ்வேன். நண்பர்களுக்கும் வாங்கித் தருவேன். பணத்தை வீணாக்க மாட்டேன்.” என்றான் பீட்டர். “உண்மையில் இது விளையாட்டு இல்லை பீட்டர். நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதன் பெயர் தான் காலம்” என்றார் ஜோசப். “என்ன அப்பா சொல்கிறீர்கள்?” “நாள்தோறும் உன் கணக்கில் 24மணி நேரம் அதாவது 86,400 வினாடிகள் வரவு வைக்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் போது நீ பயன்படுத்தாத நேரத்தை உன்னால் சேமித்து வைக்க முடியாது. ஒவ்வொரு நாளும் வீணாக்கிய காலம் ஒருபோதும் மீண்டும் கிடைக்காது” என்றார். பணத்தை விட மதிப்பு மிக்கது காலம் என்பதை உணர்ந்த பீட்டர் திருந்தினான்.