திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது. கோயிலில் ஜன., 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார். நேற்று காலை ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குள நீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில்சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது. இரவு7:00 மணிக்கு தெப்பக்குள மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் மூன்றுமுறை வலம் வந்தது. தெப்பத் திருவிழா முடிந்து பக்தர்கள் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி, சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடந்தது.
20 ஆண்டுகளுக்கு பிறகு...: கோயில் எதிரே சன்னதி தெருவில் 16கால் மண்டபம் உள்ளது. மண்டபம் பராமரிப்பின்றி இருந்ததால் 20 ஆண்டுகளாக சுவாமி புறப்பாடு இதில் நடக்கவில்லை. கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து முயற்சியில் மண்டபம் சீரமைக்கப்பட்டது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமி, தெய்வானை மண்டபத்தில் எழுந்தருளினர். திருவிழா இல்லாத காலங்களில் இம்மண்டபம் தகவல் மையமாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.