பதிவு செய்த நாள்
21
ஜன
2019
11:01
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தைத்திருவிழா தேரோட்டம், நேற்று நடந்தது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தை திருவிழா தேரோட்டம், 12ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று காலை, 4:30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபத்தை அடைந்தார். காலை, 6:30 மணிக்கு, தை தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது.மாலை, 6:30 மணிக்கு, உபய நாச்சியார்களுடன், திருச்சிவிகையில் புறப்பட்ட நம்பெருமாள், நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து, சாந்தனு மண்டபத்தை அடைந்தார்.தைத் திருவிழாவின், எட்டாம் நாளான நேற்று முன்தினம், நம்பெருமாள், தங்கக் குதிரை வாகனத்தில் உள் வீதி உலா வந்து, வையாளி கண்டருளினார். நேற்று காலை, 4:30 மணிக்கு, தேரோட்டத்தை முன்னிட்டு, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன், தைத்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். காலை, 5:30 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு உத்தரவீதிகளில் வலம் வந்த தேர், இரவு, 7:30 மணிக்கு, நிலையை அடைந்தது. தைத்திருவிழாவில், இன்று சத்தாபரணமும், நாளை ஆளும் பல்லக்கு வைபமும் நடைபெறுகிறது.