துவாதசி அன்று 21 வகை காய்கறிகளைச் சேர்ப்பது சிறப்பு. பரங்கிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் இவற்றால் தயாரான பதார்த்தங்களைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என்பது விரத விதிகளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகாதசியன்று எந்தக் காரணம் கொண்டும் துளசி தளம் பறிக்கக்கூடாது. ஏகாதசியன்று விஷ்ணுவை வழிபடுவதற்குத் தேவையான துளசியை முன்தினமான தசமியன்றே பறித்து (பூஜைக்கோ, விரதத்திற்கோ) வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருந்து குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். அதிலும் துளசி தளமிட்டு, துளசி தீர்த்தமாகவே அருந்த வேண்டும். மேலும் ஏழு முறை துளசி இலையை மட்டும் சப்பிடலாம். ஏனெனில், துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதமிருப்பது மார்கழி மாதமான குளிர்காலத்தில் என்பதால் உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். துளசி இலையை அன்றைய நாளில் உண்ணலாம். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என்ற மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாகவே அனுஷ்டிக்கப்படுகிறது. துவாதசி அன்று சமையலில் சிலர் துவரம் பருப்பு, புளி சேர்ப்பதில்லை. அன்றைய தினம் அவரவர் வழக்கப்படி இருப்பதில் இவற்றையும் கடைப்பிடித்தல் சிறப்பாகும். பொதுவாக விரத சமையலில் வெங்காயம், பூண்டு, மசாலா சேர்ப்பது கிடையாது. சேர்க்கவும் கூடாது. ஏனெனில் இவை பக்தி சிந்தனைகளுக்கு மாறானவைகளைத் தூண்டும் என்பதே. புளிக்குப் பதில் எலுமிச்சைப் பழம் சேர்ப்பார்கள். நெல்லிக்காய்த் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரைப் பொரியல், பருப்பு கடையல் இவையே பிரதானம். சாதத்தில் பருப்புப் போட்டுப் பிசைந்து, தயிர்ப் பச்சடி சிறிது சேர்த்து, அகத்துக் கீரையைத் தொட்டு, இலையைச் சுற்றி நீர் விட்டுச் சுற்றியபடி மூன்று முறை கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா என்று பிரார்த்தித்துவிட்டுப் பின்னர் சாப்பிடத் துவங்க வேண்டும்.