பதிவு செய்த நாள்
23
ஜன
2019
10:01
திருவொற்றியூர்: தியாகராஜர் கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், முதல் முறையாக நடைபெற்ற நிலை தெப்ப உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச தினம் அன்று, கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படும். கடந்தாண்டு, குளத்தில் தேங்கியிருந்த குறைந்தளவு நீரில், நிலை தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு தீர்த்த குளம், தண்ணீரின்றி, கட்டாந்தரையாக காட்சியளித்தது. இதனால், தைப்பூச தெப்ப உற்சவத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. குருக்கள் அறிவுறுத்தல் படி, கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்ப உற்சவம் நடத்த, கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது, இதுவே முதன் முறை.
அதன்படி, பிரம்ம தீர்த்த குளத்தில், மேடை அமைக்கப்பட்டு, தெப்பம் வடிவமைக்கப்படடது. நிலை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை, தியாகராஜர் அபிஷேகம் நடைபெற்றது. இரவு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் உலா வந்த சந்திரசேகர் உடனுறை வடிவுடையம்மன், நிலை தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு, தீப துாப ஆராதனைகள், உபசாரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. நிறைவாக, மங்கல வாத்தியங்கள் முழுங்க, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘நமச்சிவாய... ஒற்றீஸ்வரா...’ என, முழங்கினர். இரவு, தியாகராஜர் திரு நடனமும், மாடவீதி உற்சவத்துடனும் விழா நிறைவுற்றது.