பதிவு செய்த நாள்
23
ஜன
2019
11:01
சிறுவாக்கம்: உலகையே காப்பவன் என, பக்தர்களால் நம்பப்படும், சிவ பெருமானுக்கு, மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பு இல்லை என, சிறுவாக்கம் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், சிறுவாக்கம் கிராமத்தில், துலுக்காணத்தம்மன் கோவில் அருகே, பழமையான சிவன் கோவில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த கோவில் சிதிலமடைந்து, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, சிவன் சிலை மட்டுமே உள்ளது. அழகான அந்த சிவன் சிலைக்கு மேற் கூரை கிடையாது. மழை, வெயிலில் வாடிக் கொண்டிருக்கிறது சிலை. அதைப் பார்த்த சிவ பக்தர்கள் சிலர், சிலை மீது துணியை போர்த்தியுள்ளனர்.
இதுபோன்ற கோவில்களை புனரமைப்பதையும், கோவில்களை பராமரிக்கவும் வேண்டிய, இந்து அறநிலையத்துறையும், அதன் அதிகாரிகளும் கண்ணை மூடிக் கொண்டுள்ளனர். இது குறித்து, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, சிவ பக்தர்கள் சிலர் கூறியதாவது: சிவன் சிலைக்கு மேலே, தற்காலிக நிழற்கூரை அமைத்து இருந்தோம். அது, காற்றில் அடித்து சென்று விட்டது. நிரந்தரமாக மேற்கூரை அமைக்க முடியவில்லை. கோவில்களின் வருமானத்தை கையாளும், இந்து அறநிலையத்துறையினர், இந்த கோவிலை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.