பதிவு செய்த நாள்
06
பிப்
2019
12:02
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி ராகு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாளை 7ம் தேதி முதற்கட்ட லட்சார்ச்சனை தொடங்கவுள்ளது.
நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவானின் திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது. அதன்படி வரும் 13-ம்தேதி மதியம் 1.24 மணிக்கு ராகுபகவான் கடக ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். இதையொட்டி நாளை 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையும், பின்னர் 14-ம் தேதி முதல் 16ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 11-ம் தேதி கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்குகிறது. 13-ம் தேதி பகல் 12 மணிக்கு கடம் புறப்பாடும், மகாஅபிஷேகமும், சிறப்பு பாலபிஷேகமும், இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெறவுள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யது கொள்ளலாம் என கோயில் உதவி கமிஷனர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.