சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(பிப்.,12) மாலை திறக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக சபரிமலையில் அசாதாரண நிலை நிலவுகிறது. மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் சபரிமலையில் பழைய நிலையே தொடர்கிறது. பெண்கள் வந்தால் தடுக்க பக்தர்களும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீசாரும் தயாராக உள்ளனர். இதனால் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள்: இன்று காலை 10:00 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுப்பப்பட்டனர். நடை திறந்தபின் வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை(பிப்.,13) அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 5:15 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 17-ம் தேதி இரவு 10:00 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும். கள்ளப்பயணம்: இந்நிலையில் சபரிமலைக்கு கள்ளப்பயணம் மேற்கொண்டு, பின்படிக்கட்டு வழியாக போலீசார் துணையுடன் சாமி தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும், மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாக அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல இளம்பெண்கள் சபரிமலை வரக்கூடும் என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சன்னிதானம், நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்புக்காக, 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.