பதிவு செய்த நாள்
12
பிப்
2019
11:02
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டு தயாரிப்புக்கு 15 ஆண்டுகளுக்கு பின் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள நெய் விற்பனை செய்ய ‘ஆவின்’ நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 32 லட்சம் லிட்டர் பாலை கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இதில் 23.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. மீதமுள்ள பாலில் நெய், பால் பவுடர், வெண்ணெய், தயிர், மோர், லஸ்சி, இனிப்பு வகைகள், பாதாம் மிக்ஸ், பவுடர் நறுமணப்பால், ஆறு மாதம் வரை கெடாத பால், ஐஸ்கிரீம் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆறு மாதம் வரை கெடாத உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் மற்றும் நெய் சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இலங்கையில் ஆவின் பால்பொருட்கள் விற்பனையை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க ‘ஆவின்’ நெய் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் செய்ய 7.24 லட்சம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் 2018 அக்டோபரில் டெண்டர் கோரியது. இதில் ஆவினின் சேலம், ஈரோடு ஒன்றி யங்கள் பங்கேற்றன. நெய்யின் தரம் மற்றும் விலை அடிப்படையில் ‘ஆவின்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் ஆவின் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்று உள்ளது.