ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் மாசி மக உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9 மணிக்கு மேல்10.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 10.40 மணிக்குமேல் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
உற்சவர் யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். நேற்று உற்சவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட வில்லை.பல கோடி ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் கோவிலில் இருக்கும் நிலையில், மிக சாதாரணமான அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது பக்தர்களை வேதனையடைய செய்தது. இது குறித்து ஸ்தலத்தாரிடம் கேட்டபோது, கோவில்நகைகள் செயல் அலுவலரின் பாதுகாப்பில் இருக்கும். அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து கொடுக்கவில்லை என்றார்.செயல் அலுவலரிடம் கேட்டபோது, சுவாமிகளுக்கு போடப்படும் சாத்து நகைகள் அனைத்தும் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. உற்சவருக்கு அலங்காரம் சரியில்லாதது குறித்து அர்ச்சகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் நகைகள் அனைத்தும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.