பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, விமரிசையாக கொண்டாடப்படும்.
இவ்வாண்டு, மாசி பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய தியாகராஜர், கோவில் உள் பிரகாரத்தை சுற்றி, கொடிமரம் அருகே வந்து, காட்சியளித்தார். அதை தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘தியாகராயா... நமச்சிவாயா’ என, முழங்கினர். பின், தியாகராஜர் மாடவீதி உற்சவம் நடைபெற்றது. மாசி பிரம்மோற்சவ நாட்களில், உற்சவரான சந்திரசேகரர், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி விமானம், யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 16ம் தேதியும்; திருக்கல்யாணம், 18ம் தேதியும் நடைபெறும். பிப்., 19ல், கடலாடு தீர்த்தவாரி உற்சவம், இரவு, கொடியிறக்கம்; 20ல், தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனம் நிகழ்வுடன், விழா நிறைவுறும். இந்நிகழ்வுகளில் பங்கேற்க, சென்னை மட்டுமின்றி, பிற பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.