பதிவு செய்த நாள்
12
பிப்
2019
04:02
சிலர் பெற்றோர் வாழ்ந்த காலத்தில், அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களை எதிர்த்துப் பேசியிருக்கலாம். சிலருக்கு துரோகம் செய்து அவர்களின் சாபத்தைப் பெற்றிருக்கலாம். இப்படிப் பட்டவர்கள் தங்கள் சாபம் தீர வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு ‘ராமநாத சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர்ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே ‘யோகலிங்கேஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். சிலர் கடன் வாங்கி ஏமாற்றுதல், பெண்களை ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் சாபம் பெற்று, அது வழிவழியாகத் தொடரலாம். இதுபோன்ற கொடிய சாபங்கள் நீங்க, இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரரை வழிபட வேண்டும். இதனால், முன்னோர் மன்னிப்பும், ஆசியும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப் 12ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.