கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2019 05:02
மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் கோவிலில் கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது சர்ப்பங்களின் தலைவன் ஆன வாசுகி, சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கி கிரகப்பதவி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் நவகிரகங்களில் சாயாகிரகமான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். அதன் படி இன்று(பிப்.,13ல்) மதியம் 2 மணி 4 நிமிடத்திற்கு கேதுபகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கேது பகவான் சன்னதியை அடைந்து. அதனை அடுத்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சரியாக மதியம் 2 மணி 4 நிமிடத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் மணிபட்டு, கார்த்திகேயன், கல்யாண சுந்தரம் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் கேது பகவான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.