பதிவு செய்த நாள்
14
பிப்
2019
03:02
ஆர்.கே.பேட்டை:மாசி மாதம், 1ம் தேதியில், நேற்று (பிப்., 13ல்)கொண்டாடப்பட்ட கிருத்திகையை ஒட்டி, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம், 1ம் தேதியான நேற்று (பிப்., 13ல்), கிருத்திகையும் சேர்ந்து அமைந்ததால், கிருத்திகையை பெண்கள் கோலாகலமாக கொண்டாடினர். வீடுகளிலும், மலைக்கோவில் களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு உற்சவம் நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலைக்கோவில், பள்ளிப்பட்டு அடுத்த, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் சுப்ரமணிய சுவாமி, மேள தாளம் முழங்க உள்புறப்பாடு எழுந்தருளினார்.இதே போல், பள்ளிப்பட்டு அடுத்த, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலுக்கு, ஆந்திர மாநிலம், நகரி, நாராயணவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் வந்திருந்து, தரிசனம் செய்தனர்.