சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் 800 ஆண்டு பழமையான கரிகால சோழீஸ்வரர் கோயிலுக்கு முதன் முறையாக மரத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
காவிரிக்கு கரை அமைத்த கரிகால சோழன் சிவ பூஜை செய்த பின்பே காரியங்களை மேற்கொள்வார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக தெற்கு நோக்கி வெகுதுாரம் சென்றதால், நாட்டிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் சிவபூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அன்று இரவு குடில் அமைத்து தங்கியபோது அவரது கனவில் தோன்றிய சிவன், தான் அதே பகுதியில் குடியிருப்பதாக கூறி மறைந்தார்.அப்பகுதியில் தேடியபோது தாமரைக்குளம் அருகே லிங்கம் இருந்ததை கண்டறிந்தார். அங்கேயே சிவபூஜையை முடித்துவிட்டு நாட்டிற்கு திரும்பினார்.
அவர் பிரதிஷ்டை செய்த மூர்த்தி என்பதால், கரிகால சோழீஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். 800 ஆண்டு பழமையான இக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் நிர்வாகத்தில் உள்ளது.இக் கோயில் மாசி மக திருவிழா தேரோட்டத்திற்கு சிறிய சப்பரத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்த ஆண்டு பிப்., 19 ல் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 50 லட்ச ரூபாயில் பிரத்யேகமாக மரத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய தொகையை நாராயணன் செட்டியார்-மீனாள் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினார்.
தேர் வெள்ளோட்டம்: பிப்., 17 ல் நடக்கிறது.ஸ்தபதி காரைக்குடி மருதமுத்து கூறியதாவது: தேர் 10.5 அடி உயரம், 8 அடி அகலம் கொண்டது. தலா மூன்று நிலைகளில் போதியல், சுவாமி சிலை கள் அமைக்கப்பட்டன. அதில் சிவனின் 63 லீலைகள் வடிவமைக்கப்பட்டன. பிரம்ம சிம்மாசனம், தேவசிம்மாசனம், சிம்மாசனம் ஆகிய மூன்று சிம்மாசனங்கள் உள்ளன. எந்த தேரிலும் இல்லாத வகையில் சிம்மாசனத்தில் சுவாமி சிலைகள் வடிவமைக்கப்பட்டன, என்றார்.