பதிவு செய்த நாள்
18
பிப்
2019
12:02
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், தீபம் ஏற்ற, கல்தூணால் ஆன நிரந்தர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் உள்ள கோவில்களில், எண்ணெய் அகல் விளக்குகள் பயன்படுத்தும் போது, சரிவர கவனிக்காமல் இருப்பதால், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தன. இதனால், கோவில்களில் அகல் விளக்குகள் பயன்படுத்த தடை விதித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.விளக்கேற்ற வரும் பக்தர்களுக்காக, பெரிய அளவிலான பித்தளை, எவர் சில்வர் விளக்கு வைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் எடுத்து வரும் எண்ணெயை ஊற்றி வழிபாடு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், பித்தளை மற்றும் எவர் சில்வர் விளக்குகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. இதை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பதும், பிரச்னையாக உள்ளது.இதற்கு மாற்றாக, புதுக்கோட்டை அருகே, லேணா விளக்கில் உள்ள கற்சிற்பங்கள் கலைக் கூடத்தில், கல் தூணில் தாமரை இதழ் போன்ற வடிவமைப்பில், கல்தூண் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் விலை, 7,000 ரூபாய்.தற்போது இந்த விளக்கு, முதல் முறையாக, புதுக்கோட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விளக்கில், தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருப்பதால், பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.