பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
திருப்பூர்:வடக்கு அவிநாசிபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 17ல்) நடந்தது.திருப்பூர், வடக்கு அவிநாசிபாளையம் வேலம்பட்டியில் உள்ள மாகாளி யம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 15ம் தேதி, விநாயகர் பூஜை, நவகோள் வேள்வி, தன பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.
கடந்த, 16ம் தேதி, இரண்டாம் கால வேள்வி, கோபுர கலசம் வைத்தல், மூன்றாம் கால வேள்வி, எண்வகை மருந்து சாற்றப்பட்டது.நேற்று (பிப்., 17ல்) காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, திருமேனிக்கு சக்தி அளித்தல், திரவிய வேள்வி, முழு நிறை வேள்வி நடந்தது. திருக்குடங்கள் உலா எடுத்து வரப்பட்டன.காலை, 8:30 மணிக்கு விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது; தொடர்ந்து, மாகாளியம்மன் விமானம், மாகாளி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அவிநாசி ஆதீனம், வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் கும்பாபிஷேகம் செய்வித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோ பூஜை, தச தரிசனம், மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, காப்பு களைதலை தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.