வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசிமக பவுர்ணமி வழிபாட்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமிக்காக பிப்.16 முதல் பக்தர்கள் சதுரகிரி மலைகோயிலுக்கு செல்ல அனுமதிக்கபட்டனர். கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான பவுர்ணமி வழிபாடு நேற்று நடந்தது. நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் தாணிப்பாறையில் குவியத்துவங்கினர். காலை 6:00 மணி முதல் வனத்துறை சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் அதிகாலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி கோயில்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தனர். அதிகாலையில் குளிர்ந்த காலநிலை நிலவியபோதிலும் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இருந்தபோதிலும் தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதி பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து திரும்பினர். சிறப்பு அன்னதானமும் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் வனஅலுவலர் முகமது ஷாபாப் உத்தரவின்படி வனசரகர் பொன்னுசாமி தலைமையில் வனத்துறையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4:00 மணிக்குமேல் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.