பதிவு செய்த நாள்
20
பிப்
2019
12:02
திருப்பதி: திருமலையில் புஷ்கரணி, பாபவிநாசம், ஆகாச கங்கை, நாகதீர்த்தம், ஜபாலி தீர்த்தம், கனகசந்தன தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், குமார தீர்த்தம் என பல முக்கியமான தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் குமார தீர்த்தம் திருமலை வனப்பகுதிக்குள் உள்ளது. வனத்துறையின் அனுமதியுடன் தான் இங்கு செல்ல முடியும். மாசி பவுர்ணமியை முன்னிட்டு இந்த தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒரு வயதான பக்தர் ஒருவர் இந்த காட்டுப்பகுதியில் வழிதெரியாமல் மாட்டிக்கொண்டார், செய்வதறியாது பெருமாளை நோக்கி கும்பிட்டார். அப்போது ஒரு சிறுவனாக அங்கு வந்த பெருமாள் காட்டில் இருந்து வெளியேறும் வழியைச் சொல்லிவிட்டு, இங்கு இருந்து செல்வதற்கு முன் அங்கு உள்ள தீர்த்தத்தில் குளித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறான். அதன்படி அந்தப் பெரியவர் இந்த தீர்த்தத்தில் நீராடியபோது முதுமைப்பருவம் நீங்கி பதினாறு வயது இளைஞனாக வடிவமெடுத்தார். சிறுவனாக வந்து தனக்கு அருளியது பெருமாளே என உணர்ந்த அந்த பக்தர் நெகிழ்ந்தார். அந்த பெரியவருக்கு குமாரவடிவம் தந்த தீர்த்தமே குமாரதீர்த்தமாக வழங்கப்படுகிறது என்றும், குமரன் என்றழைக்கப்படும் முருகப்பெருமான் அரக்கனை அழிக்க இந்த வனத்தில் தியானமிருந்து வரம்பெற்ற இடம் என்பதால் இந்த இடம் குமார தீர்த்தம் என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்புகள் சொல்கின்றன. இந்த குமார தீர்த்தத்திற்கு மாசி பவுர்ணமியன்று திரளான பக்தர்கள் சென்று தீர்த்தமாடி வழிபாடு செய்தனர். அங்கு அன்னதானமும் நடைபெற்றது.