பதிவு செய்த நாள்
20
பிப்
2019
12:02
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்த தேர்த்திருவிழாவில், பக்தர்கள் வெள்ளத்தில், திருமுருகநாதர் தேர் பவனி வந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில், திருமுருகன்பூண்டியும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
வல்லியம்மை உடனமர் திருமுருகநாதசுவாமி கோவில், முருகப்பெருமான் வழிபாடு நடத்திய தலம் என்றும், சுந்தரமூர்த்திநாயனார் பதிகம் பாடிய தலம் என்றும், புராணங்கள் கூறுகின்றன. இக்கோவிலில், மாசி மக தேர்த்திருவிழா, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடந்தது. 14ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி; 15ல் பூதவாகன, சிம்ம வாகன காட்சி; 16ல் புஷ்ப விமானம்; 17 ல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ரிஷப வாகன காட்சிகள் வானவேடிக்கையுடன் கோலாகலமாக நடந்தன. கடந்த, 18ல், வல்லியம்மை உடனமர் திருமுருகநாத சுவாமி; வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அன்று மாலை, அன்னவாகன காட்சி நடந்தது, நேற்று, காலை, மாசி மகம் நட்சத்திர உதய நேரத்தில், திருமுருகநாதர், சோமாஸ்கந்தராக தேருக்கு எழுந்தருளினர்.
விநாயகப்பெருமானும், தேவியருடன் சண்முகநாதரும், தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 3:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், சிவபக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ஓம் நமசிவாய, முருகா சரணம் என்ற கோஷங்களுடன், பக்தர்கள் வெள்ளத்தில், தேர்கள் அன்னத்தை போல அசைந்து வந்தது. நேற்று, விநாயகர் மற்றும் சண்முகநாதர் தேர்கள் நிலைக்கு வந்தடைந்தன. திருமுருகநாதர் தேர், முதல் நிலையில் நிற்கிறது; இன்று, தேர்நிலையை வந்தடையும். இன்று மாலை, 3:00 மணிக்கு மீண்டும் வடம்பிடித்து, தேரோட்டம் நடக்கும். நாளை, பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்திருவிழா விமரிசையாக நடக்க உள்ளது. வரலாற்றில் உண்மையாக நடந்த, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா, 22ம் தேதி நடைபெற உள்ளது. வரும், 23ல் பிரம்மதாண்டவ தரிசன காட்சியும், 24ல் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.