பழநி மாரியம்மன் கோயில் மாசி விழாவில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2019 12:02
பழநி: மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. பல ஆண்டுகளுக்குப்பின் இன்றைய தேரோட்டத்தில் புதிய தேர் வலம் வருகிறது. பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் நேற்றிரவு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின் அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்தார். இரவு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பூச்சொரிதல் ரதஊர்வலம் நடந்தது.
பாதவிநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு, பஞ்சநதிகள் சுற்றிவர, ஆண்டாள், மாரியம்மன், அலங்கார ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியில் பெரியநாயகியம்மன் கோயில் தேர்தான் மாசி விழாவிற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது மாரியம்மன் கோயிலுக்கென தனியாக புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடந்தது. இன்று முதன் முறையாக மாலை 4:30 மணிக்கு மாரியம்மன் புதிய தேரில் நான்கு ரதவீதிகளிலும் வலம் வருகிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.