திருவனந்தபுரம்: ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் திருவனந்தபுரம் நகரம் சில மணி நேரம் புகை மண்டலமாக மாறியது.
மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி கொடுங்கல்லுார் சென்றதாகவும், வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், இதன் பேரில் இங்கு கோயில் கட்டப்பட்டு ஆற்றுகால் பகவதி அம்மன் என பெயர் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.மாசி மகம் நட்சத்திரத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் கடந்த 12-ம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த நாட்களில் கோயிலில் தங்கி விரதம் இருந்து குத்தியோட்டம் என்ற வழிபாடு நடத்தினர்.
9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. 10:15 மணிக்கு கோயில் பூஜாரிகள் கோயில் முன்புறம் உள்ள அடுப்பில் தீ மூட்டியதும் ஒலிபெருக்கியில் செண்டை மேளம் முழக்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுப்புகளில் பெண்கள் தீமூட்டி பொங்கலிட்டனர். கோயிலை சுற்றி சுமார் 10 கி.மீ. சுற்றளவில் ரோடு, மைதானம், பஸ் ஸ்டாண்ட், வயல் வெளிகள், தென்னந்தோப்புகள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் பொங்கலிட்டனர். சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, வெள்ளை சோறு என பல வகை நிவேத்யங்களை தயார் செய்தனர்.பகல் 2:15 மணிக்கு கோயிலில் இருந்து நுாற்றுக்கணக்கான பூஜாரிகள் கோயிலின் நான்கு திசைகளிலும் சென்று பக்தர்களின் பொங்கலில் மலர் தூவி அம்மனுக்கு படைத்தனர். ஹெலிகாப்டர் மூலமும் மலர் துாவப்பட்டது. பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் விழாவாக நடத்தப்பட்டது. இரவு 11:15 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.இன்று இரவு 12:00 மணிக்கு நடைபெறும் குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். இந்த பொங்கல் விழா இரண்டு முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.