பழநி: மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில், கேரளா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பலதலைமுறைகளுக்கு முன் பழநியில் இருந்து கேரளாவிற்கு சென்ற பக்தர்கள், ஆண்டுதோறும் பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாண்டு மாசித்திருவிழாவில் கேரளமாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வையாபுரிகுளம் அருகேயுள்ள படிப்பாறை காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிச்சட்டி எடுத்துவந்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல பழநி 18 கிராம மக்கள் பால்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்து வந்தனர். வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பாதவிநாயகர் கோயிலில் இருந்து பூச்சொரிதல் ரதஊர்வலம் நடந்தது.