விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக உற்சவத்தையொட்டி முருகர் வள்ளி தெய்வானையுடன் தெப்ப உற்சவத்தில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக பெருவிழா 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி ஆறாம் நாள் விழாவாக கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் அருள்பாலித்த ஐதீக திருவிழா நடந்தது. 18ம் தேதி தேரோட்டம், 19ம் தேதி மாசி மக உற்சவம் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் திருவீதி உலா உடன் தீர்த்தவாரி நடந்தது. 20ம் தேதி 11ம் நாள் திருவிழாவாக தெப்ப உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி முருகர் வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (பிப்.,21ல்) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மாசிமகத் திருவிழா பூர்த்தி அடைகிறது.