திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கோடைக்கு முன்பாகவே வறண்டு போனது. வரத்துக்கால்வாய்கள் துார்ந்து போனதால் குளத்தில் தண்ணீர் தேக்க முடியாமல் போனது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கான தண்ணீர் வரத்துக்கால்வாய்கள் துார்ந்து போனதாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பாலும் நீர் வரத்து இல்லாமல் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மழை நேரத்தில் தேங்கிய குறைந்தளவு தண்ணீர் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வறண்டு போனது. முறையான பராமரிப்பு செய்யப்படாததால் தெப்பத்தில் நீர் வரத்து இல்லாமல் போனது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தெப்பத்தில் தண்ணீர் இருந்தால் கால்களை கழுவவும், புனித நீராடிய பின்பு பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள். தெப்பக்குளத்தில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் பாதிப்பு இல்லாமல் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். நீர் வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைப்பு செய்து, மழை நீர் தேக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என திருவாடானை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.