அந்த பெண்ணுக்கு கல்யாணமாகி ஆறு மாதம் இருக்கலாம். காஞ்சி பெரியவரின் முன் கைகூப்பி நின்ற அவளது கண்களில் கண்ணீர். “சுவாமி... என் பெற்றோர் சரியாக விசாரிக்காமல், குடிகாரருக்கு என்னைக் கல்யாணம் செய்து வைத்தனர். ஆனால் அவர் தினமும் குடிப்பதை சகிக்க முடியவில்லை. நான் அவரை விட்டுப் பிரிவதற்கு முடிவு செய்து விட்டேன். வேறு வழி எனக்கு தெரியவில்லை” காஞ்சிப்பெரியவர் அவளைக் கூர்ந்து பார்த்து, “குடிக்கிறார் சரி... குடித்து விட்டு உன்னை அடிக்கிறாரா?” “இல்லை சுவாமி. ஒரு மூலையில் போய்ப் படுத்துக்கிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளாயிட்டேனே... என்று அவ்வப்போது வருத்தமும் கொள்வார். சொல்லப் போனால் இதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்” “ஆக குடியை விட்டால் அவர் நல்லவர்... அப்படித் தானே?” “ஆமாம் சுவாமி!” “ உன் அக்காவை ஒரு நிமிடம் நீ நினைச்சுப் பார்.
குடிப்பழக்கம் இல்லாதவனுக்குத் தான் அவள் வாழ்க்கைப்பட்டாள். இப்போது அவள் நிலைமை என்னாச்சு? கல்யாணமாகி பல வருஷம் ஆகியும் வரதட்சணை கேட்டு படுத்துகிறான். தினமும் அவளுக்கு அடி உதை தான். என்ன நான் சொல்றது... உண்மை தானே?” திகைப்புடன் ’ஆமாம் சுவாமி’ என்றாள். “ஆனால் உன் கணவர் நல்லவர்; அவரிடமுள்ள ஒரே கெட்ட பழக்கம் குடி. அவ்வளவு தானே?”தலையாட்டினாள். “மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது சற்று கடினம். உன் அக்கா கணவர் சுபாவத்தில் கெட்டவர். மாமனார், மாமியாருக்கு சிரமத்தைக் கொடுக்கும் அவர் மனம் மாற நீண்ட காலமாகும். உன் கணவர் அப்படியல்ல; சுபாவத்தில் நல்லவர். ஆனால் குடிக்கிறார். அதை எண்ணி வருத்தமும் கொள்கிறார். பிறகென்ன? அவரை திருத்தும் முயற்சியில் ஈடுபடு. விரைவில் சொக்கத் தங்கமாகி விடுவார். முறையாக நடத்திய திருமண பந்தத்தை ரத்து செய்வது கூடாது. இப்போது அம்பாளின் பிரசாதமான மஞ்சள், குங்குமம் வாங்கிக் கொள். அவள் கிருபையால் நலமாக வாழ்வாய்” என்றார் காஞ்சிப்பெரியவர். நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினாள் அவள். திருப்பூர் கிருஷ்ணன்