ஒரு இளைஞனுக்கு நண்பர்கள் பலர் இருந்தனர். அவனுக்கு கடவுள் மீது தீவிர பக்தியுண்டு. ஆனால் அவனது நண்பர்களோ நாத்திகர்கள். அதில் சிலர் தலைசிறந்த எழுத்தாளர்கள். கடவுள் இல்லை என்னும் வாதத்தை வலியுறுத்தி பல புத்தகங்களை எழுதினர். வருமானம் பெருக, பெருக தலைகால் புரியாமல் குதித்தனர். மேலும் தங்களின் ஆத்திக நண்பனிடம், “கடவுள் இருந்தால் அவரை வரச்சொல், பார்க்கலாம்” என்று கேலி செய்தனர். ஒருமுறை எழுத்தாளர்களின் புத்தகங்கள் சில, மேஜை மீது இருந்தன. அங்கு வந்த இளைஞர், அவற்றின் மீது தான் கொண்டு வந்த ஆன்மிக புத்தகத்தை வைத்தார். இதைப் பார்த்ததும் எழுத்தாளர் ஒருவருக்கு வந்ததே ஆத்திரம். வேகமாக வந்து, அதை எடுத்து தங்கள் புத்தகங்களுக்கு அடியில் வைத்தார்.
இளைஞன் சிரித்தான்.“நீர் செய்தது சரிதான். ஆன்மிகம் தான் எல்லாவற்றுக்கும் அஸ்திவாரம் என்று சொல்லாமல் சொல்கிறீர் போலும்,” என்றான். இதைக் கேட்ட இன்னொருவர் அதை எடுத்து புத்தகங்களின் நடுவில் வைத்தார். இளைஞன் முன்னை விட பலமாகச் சிரித்தான். “நண்பர்களே! ஆன்மிகம் தான் எல்லாவற்றுக்கும் அச்சாணி என்கிறார் இவர்!” என்றான். அவர்களால் எதுவும் பேச முடியாமல் திகைத்து நின்றனர்.