ஒரு பெண் தன்னில் தானே அரசு செலுத்திக்கொள்கிறாள். ஓர் அரசு என்றால் நால்வகைப் படை (யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை) இருத்தல் வேண்டும். பெண்ணிடமும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நால்வகைக் குணங்களே நால்வகைப் படைகளாயிருந்து அவளைக் காக்கின்றனவாம். அரசுக்கு நல்ல அமைச்சர்கள் வேண்டும். அவ்வகையில் பெண்ணுக்கு அவளின் ஐம்புலன்களே அமைச்சர்கள். அரசுக்கு அணியாக முரசம் வேண்டாமா? பெண் தன் காலில் அணியும் சிலம்பும் மெட்டியுமே முரசோசை எழுப்புவதாயுள்ளன. அரசுக்கு வேலும், வாளும், வில்லும் ஆயுதம், பெண்ணின் இரு கண்களே அத்திறம் கொண்டதாயுள்ளன. அனைத்துக்கும் மேலாக பெண்ணின் மதிவதனமே வெண்கொற்றக் குடையாய் திகழ்கிறது. இதை, புகழேந்திப் புலவர் தமயந்தியைக் குறித்த பாடலில் குறிப்பிடுகிறார்.