எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மவுனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. சுந்தர காண்டத்தில், அசோக வனத்தில் மரத்தின் மேலிருந்து சீதை - ராவணன் உரையாடல் நிகழ்வைப் பார்க்கிறான் அனுமன், அப்போதே, சடாரென்று குதித்து, ராவணனிடம் ஆக்ரோஷமாக அனுமன் பேசியிருக்கலாமே? ஆனால், அப்படிப் பேசியிருந்தால், விளைவுகள் வேறுவிதமாகியிருக்கலாம். எனவே, தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நடப்பதை மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்னர், ராஜ சபையில் ராவணனைச் சந்திக்கும்போது, அங்கு முழங்குகிறான் தன் வீராவேசமான பேச்சை, ஒரு விஷயத்தைச் சொல்வது கலை என்றால், ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்வது, அதைவிட நுணுக்கமான கலை, மவுனத்தைப் பேசவைக்கிற கலை அது!