கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2019 11:03
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோவில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் மார்ச் 14 அன்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு கோயில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றி பங்குனி திருவிழா துவக்கி வைக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டிக்கொண்டனர். பங்குனி விழாவை முன்னிட்டு பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்க குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் தினமும் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவின் 9ம் நாளான மார்ச் 23 அன்று அதிகாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், காலை 9:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கும். பத்தாம் நாளான மார்ச் 24 அன்று காலை 10:00 மணிக்கு கோயில் தெப்பத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கும். மார்ச் 25 அன்று காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறும். கோயில் பணியாளர்கள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.