பதிவு செய்த நாள்
16
மார்
2019
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர விழாவில், ஐந்தாம் நாளான நேற்று, வெள்ளி அதிகார நந்தி சேவையில், பழைய உற்சவர் சிலை வீதியுலா நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பல பிரச்னைகளுக்கு பின், பழைய உற்சவர் சிலையை, சுவாமி வீதியுலாவிற்கு பயன்படுத்த வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜடிபந்தனம் எனப்படும், சிலை சீரமைப்பு பணி, 13ல் நடந்தது.நேற்று முன்தினம், சீரமைக்கப்பட்ட பழைய சிலைக்கு குடமுழுக்கு நடந்தது. அன்றிரவே, வெள்ளி இடப வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை, பழைய உற்சவர் சிலை, வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு பின், பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில், பழைய உற்சவர் சிலை கம்பீரமாய் வீதியுலா வந்ததால், வழிநெடுகிலும், பக்தர்கள் காத்திருந்து, பக்திபரவசத்துடன் வழிபட்டனர். ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம், 17ல் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்காக தேர் கட்டுமானப்பணி தீவிரமாக நடக்கிறது.