ஒருமுறை தாயின் பெருமை குறித்து காஞ்சிப்பெரியவர் விளக்கினார். ”சோழ மன்னர்களில் ஒருவர் கோச்செங்கட்சோழன். அவருக்கு இந்த பெயர் வந்தது ஏன் தெரியுமா? அவர் தாயார் செய்த தியாகமே காரணம். பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல; பிறக்கப் போகும் குழந்தைக்கும் கூட தியாகம் செய்பவளே உத்தமமான தாய். சோழனுடைய தாயாருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்ற சூழல். இந்நிலையில் அரண்மனையின் ஆஸ்தான ஜோதிடர், ”மன்னா! இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு பிரசவம் நடந்தால் சுபநேரத்தில் குழந்தை பிறக்கும்; பிற்காலத்தில் அக்குழந்தை பெரும் புகழுடன் இருக்கும்” என்றார். இந்த தகவல் மகாராணியின் காதுக்கு வந்தது. அவள் என்ன செய்வது என யோசித்தாள். பொதுவாக பிரசவ நேரத்தில், ’எப்போது வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்’ என்று தான் பெண்கள் சிந்திப்பார்கள். ஆனால் மகாராணி தன் வேதனையை பொருட்படுத்தவில்லை; தன் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என தீர்மானித்தாள்.
”என்னைக் கயிற்றில் கட்டி, தலைகீழாக தொங்க விடுங்கள்” என்று பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டாள். அதனால் பிரசவமாவதற்கு, சற்று தாமதமாகும் அல்லவா? அவள் சொன்னபடி பணிப்பெண்களும் செய்தனர். சகிக்க முடியாத கஷ்டத்தை தாங்கினாள் அந்த தெய்வத்தாய். ஒன்றரை மணி நேரம் கடந்தபின்னரே பிரசவம் நடந்தது. தலைகீழாக தொங்கியதால் குழந்தையின் முகமெல்லாம் ரத்தமேறியிருந்தது. குறிப்பாக கண்கள் ’செக்கச் செவல்’ என்றானது. சிவப்பான கண்களாக கொண்டவன் என்பதால் குழந்தைக்கு ’கோச்செங்கண்’ எனப் பெயரிட்டனர். தாயின் மனம் போலவே பிற்காலத்தில் புகழுடன் இந்த சோழன் நல்லாட்சி நடத்தினான். 72 சிவன், மூன்று பெருமாள் கோயில்களுக்கு திருப்பணி செய்யும் பெரும்பேறு பெற்றான்” என்றார்.