பிரவுன் என்ற இளைஞன் கப்பலில் பயணம் செய்தான். நடுக்கடலில் புயல் வீசவே, கப்பல் அலைக்கழிக்கப்பட்டு பாறைகளில் மோதியதால் கப்பலில் இருந்தவர்கள் இறக்க நேர்ந்தது. பிரவுன் மட்டும் பிழைத்து, ஒரு தீவில் கரையேறினான். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. தாய்நாடு திரும்ப வழிகாட்டும்படி கடவுளை பிரார்த்தித்தான் பிரவுன். தீவில் கிடைத்த காய், கனிகளை சாப்பிட்டான். நான்கு நாட்கள் பாடுபட்டு ஒரு குடிசை அமைத்தான். காலம் கடந்ததே தவிர அவனுக்கு உதவ யாரும் வரவில்லை. ஒருநாள் உணவு தேடச் சென்று போது, குடிசை தீப்பற்றியது. ஓவென கதறி அழுதான். அப்போது கப்பல் ஒன்று தீவை நோக்கி வந்தது. கடற்கரைக்கு ஓடி வந்தான். கப்பலின் கேப்டன், “இங்கு தீப்பற்றி புகை கிளம்புவதைக் கண்டேன்; யாருக்கோ உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து கப்பலை நிறுத்தினேன்” என்றார். துன்பம் என்பது தற்காலிகமானது தான். அதன் பின் நன்மை ஒளிந்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது.