பாகூர்:பாகூரில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் மேற்கு வீதி - கன்னியக்கோவில் வீதி சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 17ல்) இரவு பூசாரி பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று (மார்ச்., 18ல்)அதிகாலை கோவில் திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, அம்மன் சிலைக்கு முன்பாக இருந்த உண்டியல் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் உள்பிரகாரத்தில் உண்டியலும், சில்லரை நாணயங்கள் மட்டும் கிடந்தது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதும் திருடு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகூர் போலீஸ் சப்- -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில்,கோவிலுக்கு பின்புறமாக மதில் சுவர் வழியாக மர்ம நபர்கள் உள்ளே இறங்கி உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.