பதிவு செய்த நாள்
22
மார்
2019
02:03
பெண்ணாடம்: பங்குனி உத்திரத்தையொட்டி, பெண்ணாடம் சேனைத்தலைவர் சிவசுப்ர மணியர் மடாலய கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்ணாடம், வள்ளி தேவசேனா சமேத சேனைத்தலைவர் சிவசுப்ரமணியர் மடாலய கோவிலில், கடந்த 12ம் தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று (மார்ச்., 21ல்) காலை 7:30 மணியளவில், வெள்ளாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, செடல் அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று, சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.இன்று (22ம் தேதி) வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை (23ம் தேதி) இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர பெருவிழா நிறைவடைகிறது.
நெல்லிக்குப்பம்மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரம் துவங்கியது.தினமும் சிறப்பு அபிஷேகமும் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. நேற்று (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது .ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தனர். கைலாசநாதர் கோவில் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நடந்தது.