பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் காவடிகள் மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநியில் நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பாத விநாயகர் கோயில் கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக பக்தர்களை மலைக்கோயிலுக்கு அனுப்பினர்.
மேலும் தடுப்புகளில் அரைமணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்து, யானைப்பாதை வழியாக கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களை மலைக்கோயிலுக்கு அனுப்பினர். இதனால் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
அத்துடன், மலைக்கோயிலில் நெரிசல் ஏற்படும் என்பதால், தரிசனம் முடித்ததும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க தடை விதித்து, உடனடியாக படிப்பாதை வழியாக கீழே இறக்கி விடப்பட்டனர். கிரிவீதி வரை நீண்டிருந்த வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து வின்ச்சுகள், ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். அன்னதானக் கூடத்தில் 4 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.