பதிவு செய்த நாள்
23
மார்
2019
12:03
ஆனைமலை : ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த, 5ம் தேதி கொடிகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 17ம் தேதி திருமஞ்சனம், கண்ணபிரான் துாது, ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் காலை குண்டம் கட்டுதல் மற்றும் அலங்கார பெரிய தேர் வடம் பிடித்தல் நடந்தது. இரவில், 60 அடி நீளம், 11 அடி அகலமுள்ள குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது.
நேற்று காலை, 8:00 மணிக்கு குண்டம் பூ இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்திப்பரவசத்தில் கோஷமிட்டனர். ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று, 23ம் தேதி மாலை திருத்தேர் நிலை நிறுத்தம், மாலை ஊஞ்சல், பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நடக்கிறது.
கோட்டூர்: கோட்டூர் மலையாண்டிபட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, 5ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 13ம் தேதி கொடியேற்று விழா, 19ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், 20ம் தேதி பூவோடு நடந்தது.நேற்று முன்தினம் இரவு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது.இரவு தேரோட்டம் நடந்தது. இன்று, 23ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தம், பரிவேட்டை நடக்கிறது. 29ம் தேதி மகா அபிஷேகம் நடக்கிறது.