பதிவு செய்த நாள்
23
மார்
2019
02:03
அவிநாசி : அவிநாசி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் முன்னிட்டு, திருத்தேர் அலங்காரம் துவங்கும் வகையில், முகூர்த்தக்கால் பூஜை நேற்று (மார்ச்., 22ல்) நடந்தது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி சிவாலயமானதும், தமிழதக்தின் மூன்றாவது பெரிய தேர் கொண்ட, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா அடுத்த மாதம் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முக்கிய வைபவமான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 14ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி பஞ்சமூர்த்திகள், திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 17ம் தேதி பெரிய தேரோட்டம், 18ம் தேதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேரோட்டமும் நடக்கிறது.
இதற்காக, இரு தேர்களும் அலங்காரம் செய்யும் பணி துவங்கும் வகையில், முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. பெரிய மற்றும் சிறிய தேரில், சிவாச்சார்யார்கள் பூஜை செய்து, முகூர்த்தக்கால் நட்டினர். இனி, தேர் அலங்கார பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.