பழநி: பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு , பழநி முருகன்கோயிலுக்கு சேலம் மாவட்ட பக்தர்கள் பறவைக்காவடி எடுத்துவந்தனர். பழநி முருகன்கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 15 முதல் 24 வரை நடந்தது. ஈரோடுமாவட்டம் கொடுமுடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடியுடன் பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடி எடுத்து கிரிவீதியை வலம் வந்து மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவின் கடைசி நாளான நேற்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடிகள், மயில்காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விடுமுறை தினம் என்பதால் ரோப்கார், வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்தனர். மலை கோயிலில் பொது தரிசன வழியில் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப்புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 11:00மணிக்கு திருஆவினன்குடியில் கொடியிறக்கம் நடந்தது.