ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் புஷ்பயாகத்துடன் நேற்று நிறைவடைந்தது.
கடந்த மார்ச் 13 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 21 அன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது. இதனையடுத்து ஆண்டாள் கோயில் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு புஷ்பயாகத்துடன விழா நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு அனந்தசயனபட்டர் மற்றும் முத்துபட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். மல்லிகை, ரோஜா, மரிக்கொழுந்து, துளசி உட்பட பல்வேறு பூக்களால், ஆண்டாள்-ரெங்கமன்னார் முன்பு பரந்து விரிந்த பூக்கோலமிடபட்டதை திரளான பக்தர்கள் தரிசித்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள் ரகு, பாலாஜி,சுதர்சன், மணியம் கோபி பங்கேற்றனர்.