திருப்புவனம்: திருப்புவனம் பாலகிருஷ்ணபெருமாள் கோயில் 121வது சித்திரை திருவிழா 13ம் தேதி சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாளுக்கு காப்பு கட்டி விழா தொடங்கியது.
நேற்று காலை யாதவா வீதிகோயில் வீட்டில் இருந்து புறப்பட்ட பாலகிருஷ்ண பெருமாளுக்கு ரங்கநாத பெருமாள் கோயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்ரஹாரம் வழியாக வந்த பெருமாளுக்கு காலை 10:00 மணிக்கு புஷ்பவனேஸ்வரர் கோயில் வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாள் தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட தண்ணீர் இல்லா வைகை ஆற்றில் பாலகிருஷ்ண பெருமாள் அழகர் கோலத்தில் இறங்கிபக்தர்களுக்கு காட்சியளித்தார். பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் இந்தாண்டு மழை பெய்து விவசாயம் செழிக்கும் என பக்தர்கள்தெரிவித்தனர். பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் பெருமாள் முனியாண்டி கோயிலில் இரவுதங்கினார். இன்று வீரபத்ரசாமி கோயிலுக்கு செல்லும் பெருமாள் இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலா வருகிறார். 16ம் தேதிகாலை 10:00 மணிக்கு பட்டாபிசேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கிராமமக்கள், யாதவர் பண்பாட்டு கழகம்,ஸ்ரீபாலகிருஷ்ண பெருமாள்கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.