பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
12:04
அவிநாசி:63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்த, அறுபத்து மூவர் திருவிழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு நடந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம், நேற்றிரவு கோவில் வளாகத்தில் நடந்தது.
அதில், மூஞ்சூறு வாகனத்தில் விநாயக பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், மயில் வாகனத்தில் சுப்ரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.சிவனடியார்களும், பக்தர்களும், நமசிவாய வாழ்க என கோஷமிட்டாறு வழிபாடு செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் மற்றும் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தார், சிவகண பூத வாத்தியங்களை இசைக்க, வாணவேடிக்கையுடன் பஞ்சமூர்த்திகளும், நாயன்மார்களும், நான்கு ரத வீதிகளில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.விழாவையொட்டி, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் முத்து நடராஜன் துவக்கி வைத்தார். நேற்று தமிழ்ப்புத்தாண்டு தினம் என்பதால், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுபத்து மூவர் விழாவில், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.