பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
12:04
தேனி: தேனி அல்லிநகரம் கிராம கமிட்டி சார்பில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார், சோலை மலை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. சுவாமி வீதியுலாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி மார்ச் 29ல் காலையில் வீரப்ப அய்யனார் கோயில் வீட்டிலிருந்து சுவாமி புறப்பாடு நடந்து, மலைக்கோயிலில் கொடியேற்றப்பட்டது.
இரவு அய்யனார் நகர்வலம், பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏப்ரல் 10, 12 ல் காவடிகளுக்கு கலசங்கள் கட்டப்பட்டது. ஏப். 13ல் மாலை 4:45 மணிக்கு மின் அலங்காரத்துடன் கோயிலிருந்து அல்லிநகரம் நகர வீதிகள், பெரியகுளம் ரோடு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்ட அய்யனார், நேருசிலை, மதுரை ரோடு வழியாக பங்களாமேட்டில் உள்ள சோலைமலை அய்யனார் கோயில் வரை வீதியுலா சென்றார். அங்கு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
புஷ்ப பல்லக்கு: சித்திரை திருவிழாவையொட்டி நேற்று காலை 7:45 மணியளவில் வீரப்ப அய்யனார் காவடியுடன் குதிரை வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் புறப்பட்டார். மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோயில் சென்றடைந்தார். இரவு 8:00 மணிக்கு புஷ்ப அலங்காரம், மின் அலங்காரத்துடன் சுவாமி நகர்வலம் வந்தது. நாளை மறுபூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறநிலைத்துறை நிர்வாகத்துடன் அல்லிநகரம் கிராம கமிட்டித் தலைவர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் தாமோதரன், உதவிச் செயலாளர் வீரமணி, பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் 21 சமூக நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்பம்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஓங்கி உயர்ந்த மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் வளாகத்தில் முடிகாணிக்கை செலுத்தியும், காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மலைப்பகுதியில் இருந்த சுனையில் நீர் வரத்து மிகவும் குறைந்திருந்ததால், அருகில் உள்ள வற்றாத கிணற்று நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி பக்தர்கள் குளிக்கவும், அன்னதானம் உள்ளிட்ட தேவைக்கும் பயன்படுத்தினர். நேற்று முன்தினம் இரவு முதல் அதிகப்படியான பக்தர்கள் வந்து சென்றனர். ராஜதானி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நெரிசலை தவிர்க்க, கோயில் வளாகம் வரையில் பஸ் மற்றும் இதர வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், ஒரு கி.மீ.,துாரம் வரையில் நடந்து சென்றனர்.