பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
தேனி: தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பக்தர்கள் புடைசூழ நேற்று கோலாகலமாக நடந்தது. தேனி பங்களாமேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 7 ல் துவங்கியது.
நேற்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.காலை 7:00 மணிக்கு திக்பலியும், காலை 9:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், பத்ரகாளியம்மன் கோயில் பராமரிப்புக்குழு உறுப்பினர்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அனைத்து நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.இன்று காலை 7:00 மணிக்கு அபிஷேக தீர்த்தவாரியும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்க உள்ளது.
சின்னமனுார்: சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. தேர்தல் நடைமுறைகளால் இன்று தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்–சிவகாமியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. சிவாச்சாரியார் மஹாராஜா பட்டர் திருநாண் பூட்டி நடத்தி வைத்தார். பெண்கள் புது தாலி கயிறு மாற்றிக்கொண்டனர். உபயதாரர்கள் சார்பில் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அறநிலையத்துறையினரின் குளறுபடியால் திருக்கல்யாண மேடையருகே வி.ஐ.பி.,கள் அமருவதிலும், பிரசாத பை வாங்குவதற்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தேர்தல் பணிக்கு பெரும்பாலானோர் சென்று விட்டதால், குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
தேரோட்டம்: இன்று மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘தேர்தல் நடைமுறை காரணமாக தேரோடும் வீதிகளில் மின் இணைப்பு துண்டிக்க வாய்ப்பில்லை,’ என மின்வாரியம் கை விரித்து விட்டது. இதனால் ஐதீகத்தை மீறாமல் நிலையிலிருந்து தேர் வடம் பிடித்து வெளியேற்றப்படும். சிறிது துாரத்தில் உள்ள காமராஜர் திடலில் நிறுத்தப்படும். நாளை காலை 8:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கி கண்ணாடி கடை முக்கில் நிறுத்தப்படும். மாலை 5:00 மணிக்கு அங்கிருந்து மெயின் ரோடு வழியாக தேரோட்டம் நடைபெற்று, நிலை வந்தடையும்.